Wednesday, August 04, 2004

தன்னெஞ்சே தன்னைச் சுடும்

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
திருக்குறள்

தான் சொல்வது பொய்தான் என்று அறிந்தும் ஒருவன் பொய் சொல்லும் காலத்தில், அந்தப் பொய்யை அவன் சொல்லியபின், அவன் நெஞ்சம் அவனை, “பொய் சொன்னாயே, பொய் சொன்னாயே” என்று வாட்டி வதைக்கும்.

ஒரு பெண்ணின் தந்தை, அவளுக்கு மணமுடிக்க எண்ணி மணமகன் தேடப் போக, பிள்ளை வீட்டார், அவரிடம் 20 பவுன் பொன் நகை கொடுத்தால் கல்யாணம் பற்றி பேசலாமென்று கூற, “சரி” என்று தலையாட்டி விட்டு வந்துவிட்டார். இரண்டு பவுனுக்கே வழியில்லாத போது எங்கிருந்து 20 பவுன்? அவர் குறுக்கு வழியில் எண்ணத் தொடங்கி, நல்ல கவரிங் நகையாக வாங்கி, அதைப் பொன் நகை என்று காட்டி கல்யாணமும் முடிந்தபின், அவர் மனம் தினமும் “குட்டு வெளிப்பட்டுவிட்டால் என்ன செய்வது” என்ற பயத்திலேயே பதைபதைத்தது.

ஏன் சார், அவர் மனசாட்சிக்கு எதிராக ஒரு செயலைச் செய்துவிட்டு, அது பொய்யென்று தெரிந்தும் மறைத்ததால் தானே இந்த நிலை? கூனி குருகி நிற்க வேண்டிய கட்டாயம்? இக்காலத்தில் அத்தகைய நிபந்தனைகள் இல்லாது, பெண்ணை ஒரு வியாபாரப் பொருளாகப் பார்க்காது, அவளை ஒரு மனிதப் பிறப்பாக மதித்து, சம அந்தஸ்து கொடுத்து வாழ்க்கை நடத்த, எவ்வளவோ நல்ல இளைஞர்கள் இருக்க, அத்தகைய பொய் எல்லாம் சொல்லாமல், நிபந்தனைகளுக்கு படியாது ராஜா போன்ற ஒரு நல்ல மணமகனாகத் தேடி திருமணம் செய்விக்கலாமே.

வங்கத்தமிழன்

No comments: