Saturday, August 14, 2004

“எலி வாகனனே - யானை முகனே”

“எலி வாகனனே - யானை முகனே”

ஒரு நாள் ஒரு சுவையான சுவாரஸ்யமான ஒரு வாக்குவாதம் தொடங்கியது. நண்பர் ஒருவர் “பிள்ளையாருக்கு எலி வாகனம் என்று இந்து மதம் கூறுகிறதல்லவா, அது எப்படி சாத்தியம்” என்றார். “பிள்ளையார், உருவத்தில் பெரியவர், எலியோ எவ்வளவு சிறியது, அப்படியிருக்க இது எவ்வாறு சாத்தியம். இது ஒரு பொய்யான உருவகம் தானே” என வினவினார். அருகே இருந்த இன்னொரு நண்பர், “பிள்ளையார் காலத்தில், பெரிய எலிகள் இருந்தன, அவை யானையைச் சுமக்கவல்லவை” என்று பதில் கூற, மற்றொரு நண்பர், “பிள்ளையார் இருந்த காலத்தில் என்றால், அவர் இப்போது இல்லை என்று தானே பொருள்? இல்லாத ஒன்றைப்பற்றி ஏனய்யா வாக்குவாதம்” என்று கூற வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
இவர்களை விடுங்க சார். நாம இதற்கு ஒரு விடை தேடுவோம். சரி, மேற்குறிப்பிட்டது உண்மையா? யானை போன்ற வலிய உருவம் கொண்ட விநாயகர் எலிமீது பயணித்திருப்பாரா? இது சாத்தியமா? என்ற கேள்வியைக் கேட்க, இது ஏன் நமக்கு ஒரு தத்துவத்தை உணர்த்த செய்யப்பட்ட உருவகமாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றும்.
உருவகத்தைத் தாண்டி அதனுள்ளிருக்கும் கருத்தை பார்த்தால், கடவுள் என்பது ஒரு சக்தி என்பதை நாம் உணர்வோம் (நாத்தீகம் பேசும் நல்லவர்களும், நமக்கும் மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை ஆமோதிக்கின்றனர், ஆனால் அதை கடவுள் என்று கொள்ளாது அறிவியல்வழி அதற்கு விடை காண முற்படுகின்றனர்). “மனிதனென்பவன் தெய்வமாகலாம்” என்றும், “நற்செயல்களால் கடவுள் நிலைக்கு உயர்ந்த மனிதர்களைப் பற்றியும் நாம் அறிவோம். ஆக நல்லன செய்தால் பெருமைப்படுவர் (பெரிய உருவமாகக் கொள்ளலாமா?). தீயன செய்தால் சிறுமைப்படுவர் (மூஷிக அசுரன் என்ற கொடியவனைத் தானே எலியாக உருவகப்படுத்தினர் - ஆகையால் தீயவை சிறியதாகக் காண்பிக்கப் படலாமல்லவா?). இப்போது பாருங்கள் நல்லன எப்போதும் பெரிய வடிவம் எடுத்து, தீமைக்கு எதிராக, பூதாகாரமாக மாறி அவற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் (வாகனம் ஒருவர்க்கு கட்டுப்பட்ட விஷயம் தானே) என்ற கருத்தைத் தான், பிள்ளையார், எலியின் மீது பயணித்ததாக காட்டி, ஒரு நல்ல கருத்தை நமக்கு உணர்த்த முற்பட்டிருக்கிறார்களோ நம் மூதாதையர்கள்?
வங்கத்தமிழன்

No comments: