ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
திருக்குறள்
பசியைப் பொறுத்துக் கொண்டிருக்கும் விரதங்கள் மேற்கொள்வதைவிட சிறந்த நோன்பு, பசியால் வாடும் ஒருவர்க்கு வயிறார உணவளிப்பது. பசிப்பிணி என்னும் பாவியது தீர்ப்பவர், வேறெந்த புண்ணியமும் செய்யத் தேவையில்லை. பல கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் இந்தியா போன்ற நாடுகளில், அனைவருடைய பசியையும் போக்குவது மிகக் கடினம், ஆனால் நமக்குத் தெரிந்து கண்ணெதிரே கஷ்டப்படும் யாராவது ஒருவர்க்கு உதவுவதும் கொடை தான். பசித்தவனுக்கு உணவு வழங்குவதைவிட மேலும் சிறந்த ஒரு செயல் உண்டு, அது “மீன் சோறு போடுவதைவிட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது” தான். ஆனால் இக்காலத்தில் பிச்சைக்காரர்கள் மொபைல் போனும், பங்களாக்களும், சங்கங்களும் வைத்திருக்கும் போது, எப்படிக் கொடுப்பது என்று அஞ்சுவது இயல்பு தான். அத்தகைய நிலையில், யாருக்குக் கொடுக்கிறோம் என்று யோசித்துச் செய்வது நல்லது.
சென்ற வாரம் சென்னை சென்ற பொது நடந்த ஒரு சுவையான சம்பவம் இது. என்னுடன் பயணித்தவரிடம் ஒரு பிச்சைக்காரன் ஏதாவது கொடுங்கள் என்று கேட்க (அவன் கையில் ஒரு பெரிய பை, அதில் பிச்சையெடுத்த பொருட்களை சுமக்க முடியாமல் சுமந்து வருகிறான்) அந்த நண்பர், “இல்ல போப்பா” என்று கூற, அவன் பைக்குள் துளாவி ஒரு வாழைப்பழத்தை எடுத்து, “ஒண்ணுமில்லேன்னா, இதைச் சாப்பிட்டுக்கோ” என்றான். இப்படிப்பட்டவர்களுக்கு பிச்சையிட்டால் என்ன பலன்? உங்களிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுங்கள், ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடுங்கள். நீங்கள் பொருளீட்டி அடுத்தவர்க்கு கொடுப்பதைவிட, தேவை என்று வருபவர்க்கு, பொருளீட்டும் வழியைக் காட்டுங்கள், உங்களைப் பல வாய்களும், வயிறுகளும் வாழ்த்தும்.
வங்கத்தமிழன்
Wednesday, August 18, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment