Thursday, August 26, 2004

ஒரு நல்ல அமைச்சன்

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொறுத்தலும் வல்ல தமைச்சு
திருக்குறள்

ஒரு நல்ல அமைச்சன், பிரிப்பது, சேர்ப்பது, பொறுத்துக் காப்பது என்று எல்லாவற்றிலும் வல்லவனாக இருத்தல் வேண்டும். நல்லரசு புரிபவன் பொறுத்துக் காக்க வேண்டும் சரி, ஆனால் அது எதற்கு பிரிக்க வேண்டும், பிறகு சேர்க்க வேண்டும்? என்று கேட்கிறீர்களா? அதை இங்கே ஆராய்வோமா?

ஒரு நாட்டிற்கு மிகவும் தேவை என்ன? உள்ளே, அடித்துக் கொள்ளலாம் சேர்ந்துக் கொள்ளலாம். (“டேய், இவன் உள்நாட்டுக் கலவரத்தை ஆதரிக்கிறான் டோ” என்று நினைக்காதீர்கள் - நான் சொன்னது “ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர், தம்முள் சண்டை செய்தாலும் சகோதரரன்றோ” என்ற கருத்தில்) ஆனால், வெளிநாட்டுக்காரனோ, நம் நாட்டு எதிரியோ தாக்க விடுவோமா? அப்படித் தாக்க வரும் எதிரியோடு சேர்ந்து நாட்டுக்கு துரோகம் நினைப்பவரை மற்றவரிடமிருந்து பிரிப்பதும், நாட்டிற்கு ஆதரவாயிருப்பவரைப் பேணிக் காத்தலும், ஒரு வேளை, பிரிந்து சென்றோர் மனம் திருந்தி நம்மிடமே வந்தால், அவர்கள் பிழைகளைப் பொறுத்து அவர்களை மன்னித்து ஏற்பதும் தான் ஒரு நல்ல அமைச்சனின் வல்லமை.

இக்காலத்தில் அமைச்சர்களோ, பேணிக் காத்தலை விட்டு விடுகின்றனர். அவர்கள் கொள்கையே, “நம்ம பேச்சைக் கேட்கலையா, அவனை பிரிச்சிடு, அடுத்த தேர்தல்ல திரும்பவும் நமக்குச் சாதகமா பேசறானா, உடனே வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து சேர்த்துக்கோ” என்பது தான். ஐயா வள்ளுவரே, அமைச்சருக்கு தருமம் வரையறுத்து விட்டீர், இவர்களுக்கு என்ன சொல்லியிருக்கிறீர்?

வங்கத்தமிழன்

No comments: