Monday, August 30, 2004

பழி மற்றும் புகழ்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
திருக்குறள்

பழிக்கத் தக்கவைகளை செய்யாமல், அறச் செயல்களையே செய்வார்கள் புகழ் வேண்டுபவர்கள். அதாவது எதைச் செய்தால் பழி வரும், எதைச் செய்தால் புகழ் கிடைக்கும் என்பதை அறிந்தவர்கள் தாம் அறவழியில் செல்பவர்கள்.

திருட்டு என்றைக்காவது போற்றப் பட்டிருக்கிறதா? (புராணங்களில் வேண்டுமானால், வெண்ணை திருடிய கண்ணனின் செயல்கள் பழிக்கப் படாமலிருந்திருக்கலாம், ஆனால் அதிலும் அவன் ஒரு சிறு குழந்தை என்பதால், அவன் செய்த குறும்புகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்). ஒரு ரூபாய் திருடினாலும் திருட்டு தான், ஒரு கோடி ரூபாய் திருடினாலும் திருட்டு தான் என்று தான் நம் பெற்றோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

அப்படித் திருடுவது தவறு என்று தெரிந்தும், அதைத் தொழிலாகக் கொண்டவன் என்றைக்குமே புகழ் அடைய முடியாது. திருடுபவனை “சாம, தான, பேத, தண்டம்” என்கிற நான்கு முறைகளில் எதையாவதோ, அல்லது எல்லாவற்றையுமோ கையாண்டு நல்வழிப் படுத்தும் காவல்துறையினருக்குத் தானே வருடா வருடம் பதக்கங்களெல்லாம் வழங்கப்பட்டு கௌளரவம் அளிக்கப் படுகிறது. என்றைக்காவது ஒரு திருடனுக்கு மெடல் வழங்கப்பட்டுளதா? (ஆனால், எல்லா துறைகளிலும் சில கழிசடைகள் இருக்கத்தான் செய்கிறது. உடனே, வீட்டிலே மனைவியிருக்க, இன்னொருத்தியை விரட்டி விரட்டி கல்யாணம் செய்தவரையும், அரசாங்கச் சம்பளத்தில் வேறொருவர்க்குக் காரோட்டுபவரையும் தயவு செய்து ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்).

வேறு ஒரு கோணத்திலும் பாருங்கள், அவன் நாட்டு அதிகாரிகள் சொல்லித்தான் ஒரு வெள்ளையன், குமரனை கீழே தள்ளி மிதித்தான் (நம் நாட்டுக் கொடியையும் சேர்த்து அவமானப் படுத்தப் பார்த்தான்). ஆனால், அப்படிப் பட்ட நிலையிலும் கொடியை கீழே போடாமல் காத்ததனால், இன்று எவ்வளவு உயரத்தில் கொடி காத்த குமரனின் பெயர் நிலை பெற்றுவிட்டது. சரி, நம் நாட்டில் வேண்டாம், அவர்கள் நாட்டிலாவது அந்த வெள்ளைக்கார அதிகாரியின் பெயர் போற்றப் படுகிறதா.

வங்கத்தமிழன்

No comments: