Monday, August 23, 2004

தாய் மொழியில்

தாய் மொழியில் பேசிக் கேட்பதன் சுகமே தனி தான். தமிழகத்திற்கு வெளியே வாழும் நண்பர்களுக்கு இது சற்றே அதிகமாக பாதிக்கும். தாய்நாட்டிலேயே வாழ்பவர்கள் காலை எழுந்தது முதல், இரவு உரங்கப் போகும் நேரம் வரை தாய் மொழியைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர், ஆனால் வேறு மொழி பேசும் மாநிலங்களில் வாழ்வோர், வீட்டை விட்டு வெளியே சென்றால் தாய் மொழி பேச வாய்ப்பே கிடைக்காத போது, எங்காவது நம்மவர் நம் மொழியில் பேசினால் உடனே அவர்களோடு ஐக்கியமாகி விடுவதும் உண்டு.

ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தம் சொந்த மாநிலத்திற்குச் சென்று உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாக களித்து வருவது வழக்கம். பொழுது விடிந்து பொழுது போகும் வரை வேறு மொழிகளே கேட்டுப் பழகிப் போன இவர்கள், ரயிலில் பயணச்சீட்டுப் பரிசோதகர் தம் தாய் மொழியில் பேசினாலே மகிழும் போது, சக பயணியர்களுடன் தாய் மொழியில் பேச வாய்ப்பு கிடைத்தால் உச்சி குளிர்ந்து விடுகின்றனர்.

இதைப் பயன்படுத்திப்பல கருங்காலிகள், கொள்ளையடிக்கின்றனர் என்பது ஒரு உண்மை. இத்தகைய சமூக விரோதிகள் முதலில் பயணம் செய்பவரோடு உரையாடத் தொடங்கி பிறகு உணவுப் பண்டங்களை பகிர்ந்து கொள்வது போல் செய்து, அந்த உணவில் மயக்க மருந்துகளை கலந்து, பயணி மயங்கியதும் அவர் உடமைகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிடுகின்றனராம். ஆமாம், இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? குளிரிலும் மழையில் எல்லையில் குண்டு மழையில் உயிர் பிழைப்போமா இல்லையா என்று வாழ்ந்து, வருடத்திற்கு ஒரு மாதம் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கலாமென கனவுகளோடு, சம்பாதித்ததில் விதவிதமாய்ப் பொருள்கள் பார்த்துப் பார்த்து வாங்கி எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் ராணுவ வீரர்களே இதில் அதிகம் ஏமாறுகின்றனராம். ஆகையால், நண்பர்களே ரயிலில் யாராவது தமிழில் பேசினால் நன்றாகப் பேசுங்கள், ஆனால் யாரிடமும் எதையும் வாங்கிச் சாப்பிட்டு விடாதீர்கள். ஐநூறு, ஆயிரம் கிலோமீட்டர் யாரால் நடந்து வீடு திரும்ப முடியும்?

வங்கத்தமிழன்

No comments: