Friday, November 19, 2004

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே

நான் பணி புரிந்த நிறுவனத்தில், ஒரு சக தொழிலாளி ஒரு நாள் என்னிடம் வந்து, “சார், எங்கள் பிரிவின் அதிகாரியான உங்கள் நண்பர் சில காலமாகவே எனக்கு சம்பள உயர்வு கொடுக்காமல் ஏய்த்து வருகிறார். இன்று அவரிடம் சற்றே ஆவேசத்துடன் சென்று இது சம்பந்தமாக பேசத் தொடங்க, அவர் என்னிடம், “கிருஷ்ண பரமாத்மாவே சொல்லியிருக்கிறார் - கடமையைச் செய், பலனை எதிர்பாராதே - என்று, ஆகையால், சம்பள உயர்வெல்லாம் எதிர்பார்க்காதே, ஒழுங்காக வேலையைச் செய்” என்று சொல்லி அனுப்பிட்டார்” என்று புலம்பினார்.

இந்த விஷயம் வேடிக்கையாகத் தெரிந்தாலும், உண்மையிலேயே அந்த நண்பர் வேடிக்கையாகச் சொல்லியிருந்தாலும் விட்டு விடலாம். ஆனால் சொல்லப்பட்ட கருத்தை தன் சுய லாபத்திற்காக இப்படி மாற்றிக் கொள்பவர்களும் உண்டு. மனிதனாகப் பிறந்தவன் கடமைகள் பல, அந்த கடமைகளைச் சரிவர செய்ய அவனுக்கு செல்வமும் (பணமும்) ஒரு தேவை. அந்த பணத்தை ஈட்ட ஒரு கருவி தான் தொழில். ஆகையால் இப்படி ஏமார்ந்து விடாதீர்கள். சரி, உண்மையில் அந்த கடமை என்பது என்ன சார், என்று கேட்கிறீர்களா? அது வேற ஒண்ணுமில்லீங்க, நாம வாழ்க்கையில் சில விஷயங்கள் ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்ய வேண்டியுள்ளது. இவை தான் கடமை. விளக்கமா சொல்லணும்னா, கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்கறது வாழ்க்கையின் ஒரு அம்சம். அந்த மனைவி, குழந்தையை பாதுகாக்க வேண்டியது ஒரு மனிதனின் கடமை. பிள்ளையப் பெத்து தெருவிலே விட்டுட்டா, அவன் கடமை தவறியவனாகிறான்.

“தேவர் மகன்” படத்தில், சிவாஜி கணேசன் அழகான ஒரு கருத்து சொல்றார், அது “இன்னைக்கு நான் மரம் வச்சாத்தேன், நாளைக்கு நீ பழம் சாப்பிட முடியும், அப்புறம் உன் மகன் சாப்பிடுவேன், அப்புறம் அவன் மகன் சாப்பிடுவேன், ஆனா வெதை நான் போட்டது, இதுல பெருமையில்ல அப்பு, இது கடமை” என்று. உண்மையாக கடமையாக உணர்ந்து, இன்று நான் சரியா பார்த்துக்கிட்டாத் தான், என் மகன் நாளை என்னை கவனிப்பான் என்ற எண்ணமின்றி, “அவன் என் மகன், அவனைப் பேண வேண்டியது என் கடமை” என்று எண்ணிப் பிரதி பலன் எதிர்பாராது செய்தால், நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், உங்களைப் பலன் தானாக வந்தடையும்

வங்கத்தமிழன்

Saturday, September 04, 2004

“ஆத்தீகமும் நாத்தீகமும்”

பொதுவாக, ஆத்தீகம் பேசுபவர்கள், நாத்தீகம் பேசுபவர்களை ஏதோ குற்றவாளிகள் போல், சமூக விரோதிகள் போல் பார்ப்பதும், நாத்தீகம் பேசுவோர், ஆத்தீகம் பேசுபவரை, ஆதிக்கம் செய்பவராய், ஹிட்லராக உருவகப்படுத்தி பார்ப்பதும், உலகத்தில் காலம் காலமாக இருந்து வரும் ஒரு நிலை. “அந்த மனிதருக்கு, இரண்டு மகன்கள். ஒருவன், காலையில் எழுந்திருந்தால், குளித்து, சுத்தபத்தமாக, நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு, கோயிலுக்குப் போய், கடவுள் பக்தியோடு எவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறான்? இன்னொன்றோ (அஃறிணையில்) நாத்தீகம் பேசிக் கொண்டு, கடவுள் இல்லையென்று போஸ்டர் அடித்து தெருக்களில் ஒட்டிக்கிட்டு திரியுது” என்பது போன்ற பேச்சுக்கள் உங்களில் பலர் கேட்டிருப்பீர்கள்.

சரிங்க, ஆத்தீகம் பேசினால் தான் நல்லவரா, நாத்தீகம் பேசுபவரெல்லாம், நல்ங்கெட்டவரா, என்னங்க இது நியாயம் என்று நாத்தீகர்கள் புலம்புவது காதில் விழுகிறது. அண்மையில் “அன்பே சிவம்” என்று ஒரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் வரி, “ஆத்தீகம் பேசும் அடியவர்க்கெல்லாம், சிவமே அன்பாகும், நாத்தீகம் பேசும் நல்லவர்க்கெல்லாம், அன்பே சிவமாகும்” என்று மிகவும் அருமையாக சொற்களை கோர்த்திருக்கிறார். ஆமாங்க, நாத்தீகம் பேசினாலும், ஆத்தீகம் பேசினாலும், எல்லா மனிதர்களும் இயல்பாக நல்லவர்களே. “அப்பொ ஏம்பா சாதிச்சண்டை போதாதுன்னு, சாமிச்சண்டை வேறே போட்டுக்கிறாங்க” என்கிறீரா?

தனக்கும் மேலே ஒரு சக்தியுளது என்பதை கேள்விகள் கேட்காது ஒப்புக் கொள்ளும் பிரிவினர், அதை அறிவியல்வழி ஆராயத்துடிக்கும் வேறொரு பிரிவினரின் கேள்விகளுக்கு சரியான விளக்கம் அளிக்கத் தவறும் பொழுதோ, அப்படிக் கொடுக்கப்பட்ட விளக்கம் திருப்தியளிப்பதாக இல்லாத போது அதற்காக மறுசாரார், எளிதில் எரிச்சலடைவதோ தான் இந்த சாமிச்சண்டைகளுக்குக் காரணமாக இருக்க முடியும். ஒரு வடநாட்டுக் கவிஞர் (கபீர்தாஸ்) தன் பாடல் வரிகளில் “கடவுள் இருந்து, ஒருவன் அவரை இல்லை என்று சொன்னால் அந்த கடவுள் கோபித்துக் கொள்ளும், அதே சமயம் கடவுள் உண்மையிலேயே இல்லாத நிலையில், அவர் இருக்கிறார் என்றால் அதனால் அவனுக்கு ஏதும் நட்டமில்லை. ஆகையால், கடவுள் இருக்கிறார் என்று நம்புவது, இரண்டு கைகளிலும் இனிப்பான லட்டுக்களை வைத்து உண்பதற்குச் சமம்” என்று சொல்கிறார். ஆகையால், நான் கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறேன் என்று ஆத்தீகவாதிகளும், “கடவுள் கருணாமூர்த்தி என்கிறீர்கள், அத்தகைய கருணாமூர்த்தி ஒருவேளை இருந்து, அவரை நான் இல்லையென்று சொல்ல அவர் கோபமடைவாராயின் அவர் கருணாமூர்த்தியில்லை, அப்படிக் கோபமடையும் ஒரு பொருளை நான் மதித்து நடக்க வேண்டிய அவசியமுமில்லை என்று நாத்தீகவாதிகளும் பேசிக் கொண்டாலும், நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளல்லவா? “ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர், தம்முள் சண்டை செய்தாலும் சகோதரரன்றோ?”

வங்கத்தமிழன்

Thursday, September 02, 2004

புலித்தோல் போர்த்திய பசு

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியிந்தோல் போர்த்துமேய்ந் தற்று
திருக்குறள்

மனத்தில் தூய்மையில்லாமல், நான் அனைத்தையும் துறந்துவிட்டேன் என பொய் வேடமிடுபவன் செய்கைகள், ஒரு பசுமாடு, புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு, தன் இயல்புத் தன்மையான புல் மேய்வதையும் கைவிட முடியாது, பார்ப்பவருக்குச் சுலபமாக அடையாளம் தெரியக் கூடியதாக அமையும்.

உண்மையில் துறவரம் மேற்கொள்பவன், மற்றவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாதவனாக இருப்பான். அவன் சுகம், துக்கம் இரண்டாலும் பாதிக்கப்படாமல், எதற்கும் முக்கியத்துவமும் கொடுக்காமல் இருப்பான். அவனுக்கு விளம்பரம் தேவையில்லை (விளம்பரம் தேவையற்ற நிலையையே துறவரம் என்றும் கொள்ளலாம்). மாறாக, எவன் ஒருவன் போலி வேடமிட்டுக் கொண்டு, துறவி என பறைசாற்றிக் கொண்டு திரிகிறானோ, அவனது முக்கியக் குறிக்கோளே விளம்பரப்படுத்திக் கொள்வது தான். எங்கு சென்றாலும், “நான்”, “எனது” “என்னால் முடியும்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பேச்சாகத்தான் இருக்கும் அவன் பேச்சு. அதிலிருந்தே, அவன் மனத்தூய்மையில்லா போலித்துறவியா, அல்லது எந்த நிலையிலும் பாதிக்கப்படாத முற்றும் துறந்தவனா என்று நம்மால் ஒருவனை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வங்கத்தமிழன்

Tuesday, August 31, 2004

நெஞ்சு பொறுக்குதிலையே

நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ?
ஐந்துதலை பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார்

மகாகவி பாரதி

ஒரு சண்டையென்று வந்துவிட்டால், அப்பன் மகன் உறவுகூட நிற்பதில்லை. கருத்து வேறுபாட்டால், பெற்று, வளர்த்து, சோறு போட்டு, துணிமணி வாங்கித்தந்து, பாராட்டி சீராட்டிய தந்தையையே எதிர்க்கும் தைரியமும் துணிச்சலும் வந்துவிடும்.

தெருவில் ஒரு சண்டை, ஒரு இளைஞன் (18 வயது மதிக்கத்தக்கவன்) ஒரு ஐம்பது வயது நபரை செங்கற்கள் கொண்டு தாக்க முற்பட, தெருவில் இருந்தவர்கள் அவனை மடக்கி கல்லை வாங்கிக் கீழே போட்டுவிட்டு சமாதானம் செய்கிறார்கள். அவர்களை மீறி அவன், விடுங்கய்யா, “இன்னிக்கு, நானா, அந்தாளான்னு பார்த்துடணும்”னு வருகிறான். மற்றொரு புறம், “ஏண்டா தம்பி, உனக்காக நான் எவ்வளவு செலவு பண்ணியிருப்பேன், ஒரு நூறு ரூபாய் தானே கேட்டேன், அதற்கு இவ்வளவு ஆத்திரமா” என்று அந்த பெரியவர் புலம்புகிறார். இது என்ன சார், ஒரு சிறு விஷயத்திற்கு தந்தைக்கும் மகனுக்குமிடையே பிளவா. இப்படிப்பட்ட பிரிவினைகள் வீட்டு நலனையும், நாட்டு நலனையும் எங்கே கொண்டு நிறுத்தும்? உறவுமுறைகளுக்கு மதிப்பும் மரியாதையும் நம் நாட்டில் தான் இன்னமும் இருந்து வருகிறது. மேலை நாட்டவர், நம்மைப் பார்த்துத் திருந்தும் இத்தருவாயில், நாம் “மாமியாரிலிருந்து கழுதை, கழுதையிலிருந்து கட்டெரும்பு” என்று மாற வேண்டுமா?

வங்கத்தமிழன்

Monday, August 30, 2004

பழி மற்றும் புகழ்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
திருக்குறள்

பழிக்கத் தக்கவைகளை செய்யாமல், அறச் செயல்களையே செய்வார்கள் புகழ் வேண்டுபவர்கள். அதாவது எதைச் செய்தால் பழி வரும், எதைச் செய்தால் புகழ் கிடைக்கும் என்பதை அறிந்தவர்கள் தாம் அறவழியில் செல்பவர்கள்.

திருட்டு என்றைக்காவது போற்றப் பட்டிருக்கிறதா? (புராணங்களில் வேண்டுமானால், வெண்ணை திருடிய கண்ணனின் செயல்கள் பழிக்கப் படாமலிருந்திருக்கலாம், ஆனால் அதிலும் அவன் ஒரு சிறு குழந்தை என்பதால், அவன் செய்த குறும்புகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்). ஒரு ரூபாய் திருடினாலும் திருட்டு தான், ஒரு கோடி ரூபாய் திருடினாலும் திருட்டு தான் என்று தான் நம் பெற்றோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

அப்படித் திருடுவது தவறு என்று தெரிந்தும், அதைத் தொழிலாகக் கொண்டவன் என்றைக்குமே புகழ் அடைய முடியாது. திருடுபவனை “சாம, தான, பேத, தண்டம்” என்கிற நான்கு முறைகளில் எதையாவதோ, அல்லது எல்லாவற்றையுமோ கையாண்டு நல்வழிப் படுத்தும் காவல்துறையினருக்குத் தானே வருடா வருடம் பதக்கங்களெல்லாம் வழங்கப்பட்டு கௌளரவம் அளிக்கப் படுகிறது. என்றைக்காவது ஒரு திருடனுக்கு மெடல் வழங்கப்பட்டுளதா? (ஆனால், எல்லா துறைகளிலும் சில கழிசடைகள் இருக்கத்தான் செய்கிறது. உடனே, வீட்டிலே மனைவியிருக்க, இன்னொருத்தியை விரட்டி விரட்டி கல்யாணம் செய்தவரையும், அரசாங்கச் சம்பளத்தில் வேறொருவர்க்குக் காரோட்டுபவரையும் தயவு செய்து ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்).

வேறு ஒரு கோணத்திலும் பாருங்கள், அவன் நாட்டு அதிகாரிகள் சொல்லித்தான் ஒரு வெள்ளையன், குமரனை கீழே தள்ளி மிதித்தான் (நம் நாட்டுக் கொடியையும் சேர்த்து அவமானப் படுத்தப் பார்த்தான்). ஆனால், அப்படிப் பட்ட நிலையிலும் கொடியை கீழே போடாமல் காத்ததனால், இன்று எவ்வளவு உயரத்தில் கொடி காத்த குமரனின் பெயர் நிலை பெற்றுவிட்டது. சரி, நம் நாட்டில் வேண்டாம், அவர்கள் நாட்டிலாவது அந்த வெள்ளைக்கார அதிகாரியின் பெயர் போற்றப் படுகிறதா.

வங்கத்தமிழன்

Saturday, August 28, 2004

மன்னன்

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
திருக்குறள்

அக்காலத்தில் பெரும்பாலான மன்னர்கள், அரண்மனைகளில் வசித்து, செல்வத்தில் கொழித்து, வறுமைக் கோட்டிற்கு கீழிருந்த மக்களைப் பற்றிக் கவலைப்படாது, போக வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். ஆகையால், பொதுவாக மன்னனையும், அவன் குடும்பத்தாரையும் தம்மில் ஒருவராக மக்கள் பாவித்தது இல்லை. அவர்களை, உயர்ந்த குடி மக்கள் என்று தள்ளி வைத்து விட்டனர். கௌளதம புத்தர் கதையை படித்தவர்கள் இதை எளிதாக உணர முடியும். சித்தார்த்தன் ஒரு இளைஞனாகும் வரை நாட்டு மக்கள் வறுமை, அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஆகியவை பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லை.

அத்தி பூத்தார்போல் யாராவது ஒரு அரசன் மக்களோடு நெருங்கிப்பழகி அவர்கள் சுகதுக்கங்களில் பங்கு கொண்டால், அவனை அந்த நாட்டு மக்கள் போற்றிப் புகழ்வதோடு, தங்களோடு ஒருவனாக ஏற்றும் கொண்டனர். மேற்குறிப்பிட்ட சித்தார்த்தன், வெளியில் வந்து நாட்டு மக்கள் படும் அல்லல்களைக் கண்டு, மனம் வருந்தி, தன் சொந்தங்கள அனைத்தையும் துறந்து காட்சிக்கெளியனாக, எல்லோரிடமும் அன்பு காட்டும் இன்சொலனாகவும் மாற புத்தர் பிறந்தார். பார்க்கத் துறவியாக இருந்தாலும், எல்லோராலும் ஒரு மன்னனைவிட உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு தலைவனாக புத்தர் ஏற்றுக் கொள்ளப் பட்டாரல்லவா?

வங்கத்தமிழன்

Thursday, August 26, 2004

ஒரு நல்ல அமைச்சன்

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொறுத்தலும் வல்ல தமைச்சு
திருக்குறள்

ஒரு நல்ல அமைச்சன், பிரிப்பது, சேர்ப்பது, பொறுத்துக் காப்பது என்று எல்லாவற்றிலும் வல்லவனாக இருத்தல் வேண்டும். நல்லரசு புரிபவன் பொறுத்துக் காக்க வேண்டும் சரி, ஆனால் அது எதற்கு பிரிக்க வேண்டும், பிறகு சேர்க்க வேண்டும்? என்று கேட்கிறீர்களா? அதை இங்கே ஆராய்வோமா?

ஒரு நாட்டிற்கு மிகவும் தேவை என்ன? உள்ளே, அடித்துக் கொள்ளலாம் சேர்ந்துக் கொள்ளலாம். (“டேய், இவன் உள்நாட்டுக் கலவரத்தை ஆதரிக்கிறான் டோ” என்று நினைக்காதீர்கள் - நான் சொன்னது “ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர், தம்முள் சண்டை செய்தாலும் சகோதரரன்றோ” என்ற கருத்தில்) ஆனால், வெளிநாட்டுக்காரனோ, நம் நாட்டு எதிரியோ தாக்க விடுவோமா? அப்படித் தாக்க வரும் எதிரியோடு சேர்ந்து நாட்டுக்கு துரோகம் நினைப்பவரை மற்றவரிடமிருந்து பிரிப்பதும், நாட்டிற்கு ஆதரவாயிருப்பவரைப் பேணிக் காத்தலும், ஒரு வேளை, பிரிந்து சென்றோர் மனம் திருந்தி நம்மிடமே வந்தால், அவர்கள் பிழைகளைப் பொறுத்து அவர்களை மன்னித்து ஏற்பதும் தான் ஒரு நல்ல அமைச்சனின் வல்லமை.

இக்காலத்தில் அமைச்சர்களோ, பேணிக் காத்தலை விட்டு விடுகின்றனர். அவர்கள் கொள்கையே, “நம்ம பேச்சைக் கேட்கலையா, அவனை பிரிச்சிடு, அடுத்த தேர்தல்ல திரும்பவும் நமக்குச் சாதகமா பேசறானா, உடனே வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து சேர்த்துக்கோ” என்பது தான். ஐயா வள்ளுவரே, அமைச்சருக்கு தருமம் வரையறுத்து விட்டீர், இவர்களுக்கு என்ன சொல்லியிருக்கிறீர்?

வங்கத்தமிழன்

Wednesday, August 25, 2004

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
திருக்குறள்

நல்லவன் போல மற்றவரை ஏமாற்றித் திரியும் மனிதனைப் பார்த்து, அவனுக்குள் இருக்கும் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்சபூதங்கள் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளுமாம்.

எல்லோரையும் ரொம்ப சாமர்த்தியமாக ஏமாற்றிக் கொண்டு வருகிறோம், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு மற்றவர்முன் மிக நல்லவன் போல நடித்து போலியாக வேடமிடுபவர்களுக்குத் தெரியாதது என்னவென்றால், ஆண்டவன் அவர்கள் தீய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், அவன் நிச்சயம் அதற்கான தண்டனையைக் கொடுப்பான் என்பது தான். ஒவ்வொரு உயிரும், மேற்குறிப்பிட்ட பஞ்ச பூதங்களாலானதால், அந்த பஞ்சபூதங்கள் இந்த நிதர்சனமான உண்மையை இந்த மனிதன் உணராமல் இப்படி ஏமாற்றித் திரிகிறானே என்று எள்ளி நகையாடுமாம்.

வங்கத்தமிழன்

Tuesday, August 24, 2004

இந்தியா என்றொரு நாடுண்டு

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்,
சிலர் அல்லும்பகலும் தெருக் கல்லாயிருந்து விட்டு
அதிட்டமில்லை என்று அலட்டிக் கொண்டார்

ஆமாங்க, இவ்வளவு திறமை, புத்தி கூர்மை எல்லாமிருந்தும் நம்ம ஆட்கள் முன்னேறாததற்குக் காரணம் என்ன? “அது சரியில்ல, இது சரியில்ல, அரசியல்வாதி லஞ்சம் வாங்கறாம்பா, அதான் நாடு குட்டிச்சுவறாப் போகுது என்று திண்ணைப் பேச்சில் கரை கண்ட வெட்டி ஆபீஸர்கள் கதையடித்து நேரத்தை வீணடிக்கறாங்க ஒருபுறம். மற்றொருபுறம் என் படிப்புக்கு வெளி நாட்டுல தான் மதிப்பிருக்கு பாருங்க, நான் எப்படி இங்க உட்கார்ந்து காலத்தை வீணடிக்க முடியும்னு பொறுப்பைத் தட்டிக் கழிச்சுட்டு போறாங்க இன்னொரு சாரார் (வெளி நாடு போங்க, நிறைய படிங்க, கத்துக்குங்க, கத்துக் கொடுங்க, இப்போ காலம் மாறிப் போச்சு. எந்த துறையாயிருந்தாலும் மேல் நாட்டோர்க்கு அப்பன் பாட்டனெல்லாம் நம்ம ஆட்கள் எவ்வளவோ இருக்காங்க. ஆகையால், நாம் கஷ்டப்பட்டு ஆராய்ந்து நேரம், நம் உழைப்பு எல்லாவற்றையும் முதலீடு செய்து தயாரித்தவற்றை நம் நாட்டிற்கு எதாவது ஒருவிதத்தில் உபயோகமாக்குங்க. கடல் கடந்து செல்லும் எல்லோரையும் நாம் சொல்லலை. எவ்வளவோ நாட்டுக்காகவும், மொழிக்காகவும் செய்ய்றவங்க நிறைய பேர் இருக்காங்க).

அடுத்தவரைக் குறை சொல்றத முதல்ல நிறுத்தினாலே நாம முன்னேற வழி பிறந்தா மாதிரி தான்னு வச்சுக்குங்க. “என்ன வளமில்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்பதை நினைவில் கொள்ளணும். “இந்தியா என்றொரு நாடுண்டு, அது தான் உலகின் அறிவுக் களஞ்சியம்” என்று உலகெங்கும் புகழாரம் சூட்ட வேண்டும் நமக்கு.

வங்கத்தமிழன்

Monday, August 23, 2004

தாய் மொழியில்

தாய் மொழியில் பேசிக் கேட்பதன் சுகமே தனி தான். தமிழகத்திற்கு வெளியே வாழும் நண்பர்களுக்கு இது சற்றே அதிகமாக பாதிக்கும். தாய்நாட்டிலேயே வாழ்பவர்கள் காலை எழுந்தது முதல், இரவு உரங்கப் போகும் நேரம் வரை தாய் மொழியைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர், ஆனால் வேறு மொழி பேசும் மாநிலங்களில் வாழ்வோர், வீட்டை விட்டு வெளியே சென்றால் தாய் மொழி பேச வாய்ப்பே கிடைக்காத போது, எங்காவது நம்மவர் நம் மொழியில் பேசினால் உடனே அவர்களோடு ஐக்கியமாகி விடுவதும் உண்டு.

ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தம் சொந்த மாநிலத்திற்குச் சென்று உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாக களித்து வருவது வழக்கம். பொழுது விடிந்து பொழுது போகும் வரை வேறு மொழிகளே கேட்டுப் பழகிப் போன இவர்கள், ரயிலில் பயணச்சீட்டுப் பரிசோதகர் தம் தாய் மொழியில் பேசினாலே மகிழும் போது, சக பயணியர்களுடன் தாய் மொழியில் பேச வாய்ப்பு கிடைத்தால் உச்சி குளிர்ந்து விடுகின்றனர்.

இதைப் பயன்படுத்திப்பல கருங்காலிகள், கொள்ளையடிக்கின்றனர் என்பது ஒரு உண்மை. இத்தகைய சமூக விரோதிகள் முதலில் பயணம் செய்பவரோடு உரையாடத் தொடங்கி பிறகு உணவுப் பண்டங்களை பகிர்ந்து கொள்வது போல் செய்து, அந்த உணவில் மயக்க மருந்துகளை கலந்து, பயணி மயங்கியதும் அவர் உடமைகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிடுகின்றனராம். ஆமாம், இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? குளிரிலும் மழையில் எல்லையில் குண்டு மழையில் உயிர் பிழைப்போமா இல்லையா என்று வாழ்ந்து, வருடத்திற்கு ஒரு மாதம் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கலாமென கனவுகளோடு, சம்பாதித்ததில் விதவிதமாய்ப் பொருள்கள் பார்த்துப் பார்த்து வாங்கி எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் ராணுவ வீரர்களே இதில் அதிகம் ஏமாறுகின்றனராம். ஆகையால், நண்பர்களே ரயிலில் யாராவது தமிழில் பேசினால் நன்றாகப் பேசுங்கள், ஆனால் யாரிடமும் எதையும் வாங்கிச் சாப்பிட்டு விடாதீர்கள். ஐநூறு, ஆயிரம் கிலோமீட்டர் யாரால் நடந்து வீடு திரும்ப முடியும்?

வங்கத்தமிழன்

Saturday, August 21, 2004

அந்தணர்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
திருக்குறள்

எல்லாவுயிர்களிடமும் களங்கமிலா அன்பு காட்டுபவர் அந்தணர் எனப்படுவர். பிறப்பினால் எல்லா உயிர்களும் ஒன்று தான். அப்படிப் பிறக்கும் போது ஏதாவது குறைபாடோடு பிறந்தால், அவர்களிடம் மேலும் அன்பு காட்ட வேண்டியது மிக அவசியம்.

அத்தகைய களங்கமிலா, மாசிலா அன்பை எல்லோரிடமும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் காட்டி, தான் அறிந்த வித்தைகள் அனைத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து தாய் / தந்தையர்க்கு ஈடாக அவர்கள் மேம்பட எவன் ஒருவன் உழைக்கிறானோ, அவனே அந்தணன் எனக் கூறிக் கொள்ளத் தகுதியுடையவன். அன்பு காட்டுவதில் தாயைவிட சிறந்த ஒரு உதாரணம் காட்ட முடியாது, கல்வியறிவித்தலில் தந்தையைவிட வேறு உதாரணம் இல்லை. ஆகையால், அந்தணத்துவத்தை ஒரு சாதி சார்ந்த சொல்லாகக் கொள்ளாமல், எல்லா உயிர்களுக்கும் தாயும், தந்தையுமாய் அன்பு காட்டி அருள் பாலிக்கும் மனிதர்தாம் அந்தணத்துவம் அடைகின்றனர் என்று கொள்ள வேண்டும்.

வங்கத்தமிழன்

Friday, August 20, 2004

மழை

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை
திருக்குறள்

மனிதனுக்கு உண்ண உணவை உருவாக்கப் பயன்படும் மழைத் தண்ணீர், அவனுக்கு தாகம் தீர்க்கும் திரவ உணவாகவும் மாறி தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. “அந்த வானத்தைப் போல பறந்த தியாகக் குணம் படைத்தவர்” என்று தனக்கென ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்க்காக வாழ்பவரைச் சொல்லுவதுண்டு.

மானம் காக்க ஒரே ஒரு துண்டு மட்டும் கட்டிக் கொண்டு, வேறெதையும் எதிர்பாராமல், இந்த நாட்டிற்குச் சுதந்திரத்தைத் தந்த மகாத்மா போல் எத்தனை பேர் தியாகம் செய்ய முடியும்? தன்னைக் கொல்ல வந்த கோட்சேயைக் கூட “அவனை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்று சாகும் போதும் கூறி தன்னலமில்லாத மழைக்கு நிகரானார். எல்லாரும் அப்படி மாறிவிட்டால் உலகம் எப்படியிருக்கும்?

வங்கத்தமிழன்

Thursday, August 19, 2004

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
திருக்குறள்

சினம் என்ற கொடிய நோய்க்கு ஆளானோர் நிச்சயம் கெடுவர். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழி எல்லோரும் அறிந்ததே. அந்த சினம் சேர்ந்தாரை மட்டும் அழிப்பதில்லை, அவருடைய சுற்றம் சூழல் அனைத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

ஒரு சராசரி கணவன் மனைவியின் எடுத்துக்காட்டை பார்ப்போம். கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவன், மனைவியும் ஒரு தனியார் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவள். அலுவலகத்தில் இருவருக்கும் மாறிவரும் வாடிக்கையாளர் மனப்பாங்கிற்கு ஏற்ப பிரச்சனைகள் மிகவும் அதிகம். அலுவலகத்தில் யாரிடமும் கோபத்தை காட்ட முடியாமல் போக, வீட்டில் ஒருவருக்கொருவர் கடிந்து கொள்வதும், குழந்தையை அடிப்பதுமாக சில காலம் இருந்து, திடீரென ஒரு நாள் விவாகரத்தில் முடிய, இவர்கள் வாழ்க்கை கெட்டதோடு சேர்ந்து அவர்களின் பிஞ்சுக் குழந்தை ஒன்றின் வாழ்க்கையும் கெட்டு கேள்விக்குறியாகி நிற்கிறதல்லவா? ரௌளத்திரம் பழகு என்று பாரதி சொல்லியிருக்கிறார், ஆனால், எப்போதாவது ஒரு முறை மிகவும் கட்டுக்கடங்காது பிரச்சனைகள் போகும் போதுக் கோபப்பட வேண்டும், ஆனால் தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டால், வாழ்க்கை சூனியமாகிவிடும்.

வங்கத்தமிழன்

Wednesday, August 18, 2004

ஆற்றுவா ராற்றல்

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
திருக்குறள்

பசியைப் பொறுத்துக் கொண்டிருக்கும் விரதங்கள் மேற்கொள்வதைவிட சிறந்த நோன்பு, பசியால் வாடும் ஒருவர்க்கு வயிறார உணவளிப்பது. பசிப்பிணி என்னும் பாவியது தீர்ப்பவர், வேறெந்த புண்ணியமும் செய்யத் தேவையில்லை. பல கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் இந்தியா போன்ற நாடுகளில், அனைவருடைய பசியையும் போக்குவது மிகக் கடினம், ஆனால் நமக்குத் தெரிந்து கண்ணெதிரே கஷ்டப்படும் யாராவது ஒருவர்க்கு உதவுவதும் கொடை தான். பசித்தவனுக்கு உணவு வழங்குவதைவிட மேலும் சிறந்த ஒரு செயல் உண்டு, அது “மீன் சோறு போடுவதைவிட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது” தான். ஆனால் இக்காலத்தில் பிச்சைக்காரர்கள் மொபைல் போனும், பங்களாக்களும், சங்கங்களும் வைத்திருக்கும் போது, எப்படிக் கொடுப்பது என்று அஞ்சுவது இயல்பு தான். அத்தகைய நிலையில், யாருக்குக் கொடுக்கிறோம் என்று யோசித்துச் செய்வது நல்லது.

சென்ற வாரம் சென்னை சென்ற பொது நடந்த ஒரு சுவையான சம்பவம் இது. என்னுடன் பயணித்தவரிடம் ஒரு பிச்சைக்காரன் ஏதாவது கொடுங்கள் என்று கேட்க (அவன் கையில் ஒரு பெரிய பை, அதில் பிச்சையெடுத்த பொருட்களை சுமக்க முடியாமல் சுமந்து வருகிறான்) அந்த நண்பர், “இல்ல போப்பா” என்று கூற, அவன் பைக்குள் துளாவி ஒரு வாழைப்பழத்தை எடுத்து, “ஒண்ணுமில்லேன்னா, இதைச் சாப்பிட்டுக்கோ” என்றான். இப்படிப்பட்டவர்களுக்கு பிச்சையிட்டால் என்ன பலன்? உங்களிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுங்கள், ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடுங்கள். நீங்கள் பொருளீட்டி அடுத்தவர்க்கு கொடுப்பதைவிட, தேவை என்று வருபவர்க்கு, பொருளீட்டும் வழியைக் காட்டுங்கள், உங்களைப் பல வாய்களும், வயிறுகளும் வாழ்த்தும்.

வங்கத்தமிழன்

Tuesday, August 17, 2004

கல்லா தவரும் நனிநல்லர்

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
திருக்குறள்

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் தளும்பும். பல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவர்க்கு விளம்பரம் தேவையில்லை. அவர்கள் அவையடக்கத்தோடு பணிவாக இருந்தாலும் பெருமை அவர்களைத் தேடித் தானாக வரும். மாறாக, கல்வியறிவில்லாத மனிதர்கள், நானும் இருக்கிறேன். என்னைப் பாருங்கள், என்னைப் பாருங்கள் என்று கூவிக் கூவி விளம்பரம் செய்தாலும் அவர்களை யாரும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்.

ஆனால், அப்படி கற்றிராத மனிதன், கற்றவர்முன் ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு, அவர்களிடமிருந்து வித்தைகளைக் கற்க முற்பட்டால், அவனும் கல்வி கற்று உயர்ந்தவனாகவே கருதப்படுவான். கற்க வேண்டுமென்ற ஆவலிருக்கும் போது, குருவே அவசியமில்லாது, தானே ஒருவன் கற்க வழியுண்டு என்பதற்கு “ஏகலைவன்” ஒரு எடுத்துக்காட்டு. அவன் குருவாகக் கொண்டவரிடமிருந்து ஒன்றுமே கிடைக்கப் பெறாத போதுகூட, அவர்முன் அமைதியாக இருந்து, அவரது ஒவ்வொரு செயலிலும் பாடம் கற்று, அந்த குருவே அடைய முடியாத பெயரைப் பெற்றானே!

வங்கத்தமிழன்

Monday, August 16, 2004

கல்லார்கண் பட்ட திரு

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
திருக்குறள்

ஒரே அறையில் கதவுகளைத் தாளிட்டு, சாளரங்களையும் (ஜன்னல்களை) அடைத்து, ஒரு விளக்குமில்லாது, ஒரு நாள் முழுவதும் இருக்கச் சொன்னால் இருப்பீர்களா? கையை காலை அசைத்து, நான்கு வேலைகள் செய்து, மற்றவர்களோடு உரையாடி, உறவாடி இல்லாமல் சிறை பட்டது போல் யாரால் தான் இருக்க முடியும்? இதே நிலை தான் செல்வத்திற்கும் (பொருளுக்கும்). செல்வம் ஓரிடத்தில் அடைந்திருக்க விரும்பாது. எப்போதும் புழக்கத்தில் இருப்பது தான் செல்வத்தின் இயல்பு. அதை முடக்கி வைப்பதால் தான் இப்போது பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் வருகின்றன.

சரி, அதற்கும் மேற்குறிப்பிட்ட குறளுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீரா? இக்குறளில் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார்? நல்லவர்கள் அனுபவிக்கும் வறுமையைவிட, அறிவிலிகளிடம் உள்ள செல்வம் மிக்க துன்பம் தரும் என்கிறார். நல்லவர் எப்போதும் பிறருக்கு கொடுத்து மகிழ்ச்சியடைவர், ஆகையால் அவர்களுக்கு வறுமை ஏற்பட்டால், பிறருக்குக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவர்களுக்கு மட்டும் தான் வரும். ஆனால், முட்டாளகளிடம் அடைபட்ட செல்வத்தை செலவு செய்ய வழிவகைகள் தெரியாது, அந்த முட்டாள்கள் துன்பமடைவதோடு, அடைபட்டுக் கிடக்கும் செல்வமும், நல்லவர்க்கு பயனாக நாம் இருக்க வழியில்லையே என துன்பமடையும் என்று கூறுகிறார் போலும் வள்ளுவர்.

வங்கத்தமிழன்

Saturday, August 14, 2004

“எலி வாகனனே - யானை முகனே”

“எலி வாகனனே - யானை முகனே”

ஒரு நாள் ஒரு சுவையான சுவாரஸ்யமான ஒரு வாக்குவாதம் தொடங்கியது. நண்பர் ஒருவர் “பிள்ளையாருக்கு எலி வாகனம் என்று இந்து மதம் கூறுகிறதல்லவா, அது எப்படி சாத்தியம்” என்றார். “பிள்ளையார், உருவத்தில் பெரியவர், எலியோ எவ்வளவு சிறியது, அப்படியிருக்க இது எவ்வாறு சாத்தியம். இது ஒரு பொய்யான உருவகம் தானே” என வினவினார். அருகே இருந்த இன்னொரு நண்பர், “பிள்ளையார் காலத்தில், பெரிய எலிகள் இருந்தன, அவை யானையைச் சுமக்கவல்லவை” என்று பதில் கூற, மற்றொரு நண்பர், “பிள்ளையார் இருந்த காலத்தில் என்றால், அவர் இப்போது இல்லை என்று தானே பொருள்? இல்லாத ஒன்றைப்பற்றி ஏனய்யா வாக்குவாதம்” என்று கூற வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
இவர்களை விடுங்க சார். நாம இதற்கு ஒரு விடை தேடுவோம். சரி, மேற்குறிப்பிட்டது உண்மையா? யானை போன்ற வலிய உருவம் கொண்ட விநாயகர் எலிமீது பயணித்திருப்பாரா? இது சாத்தியமா? என்ற கேள்வியைக் கேட்க, இது ஏன் நமக்கு ஒரு தத்துவத்தை உணர்த்த செய்யப்பட்ட உருவகமாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றும்.
உருவகத்தைத் தாண்டி அதனுள்ளிருக்கும் கருத்தை பார்த்தால், கடவுள் என்பது ஒரு சக்தி என்பதை நாம் உணர்வோம் (நாத்தீகம் பேசும் நல்லவர்களும், நமக்கும் மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை ஆமோதிக்கின்றனர், ஆனால் அதை கடவுள் என்று கொள்ளாது அறிவியல்வழி அதற்கு விடை காண முற்படுகின்றனர்). “மனிதனென்பவன் தெய்வமாகலாம்” என்றும், “நற்செயல்களால் கடவுள் நிலைக்கு உயர்ந்த மனிதர்களைப் பற்றியும் நாம் அறிவோம். ஆக நல்லன செய்தால் பெருமைப்படுவர் (பெரிய உருவமாகக் கொள்ளலாமா?). தீயன செய்தால் சிறுமைப்படுவர் (மூஷிக அசுரன் என்ற கொடியவனைத் தானே எலியாக உருவகப்படுத்தினர் - ஆகையால் தீயவை சிறியதாகக் காண்பிக்கப் படலாமல்லவா?). இப்போது பாருங்கள் நல்லன எப்போதும் பெரிய வடிவம் எடுத்து, தீமைக்கு எதிராக, பூதாகாரமாக மாறி அவற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் (வாகனம் ஒருவர்க்கு கட்டுப்பட்ட விஷயம் தானே) என்ற கருத்தைத் தான், பிள்ளையார், எலியின் மீது பயணித்ததாக காட்டி, ஒரு நல்ல கருத்தை நமக்கு உணர்த்த முற்பட்டிருக்கிறார்களோ நம் மூதாதையர்கள்?
வங்கத்தமிழன்

Friday, August 13, 2004

“சிரிப்பு”

“சிரிப்பு” (செயற்கை மற்றும் இயற்கை)

“துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று
சொல்லி வச்சார் வள்ளுவரும் சரிங்க”

என்ற பாடலை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆரோக்கியமாக வாழத்தேவை நல்ல மனசு. நல்ல மனசுக்கு அடித்தளம் கவலையற்ற நிலை அல்லது கவலையை மறந்த நிலை. கவலையை மறக்கச் சிரிக்கணும்னு டாக்டர் சொல்றாங்க. இப்போ நாடெங்கும் சிரிப்பு கிளப் (laughing clubs) அமைக்கப்பட்டு, தினமும் காலையிலே எல்லோரும் ஒன்றுகூடி விதவிதமா சிரித்துவிட்டு கவலையற்ற ஆன்மாக்களாக புதிய நாளைத் தொடங்க, எல்லாம் நல்லபடியா கைகூடி வருதாம்.

அறிவியல் சொல்வது, “ஒவ்வொரு நிகழ்வுக்கும் (cause), ஒரு பலன் (effect) உண்டு”. சித்தாந்தங்கள் சொல்வது, “பலனை உண்டாக்கு, நிகழ்வு தானாக ஏற்படும்”. நாம் கொண்ட சிரிப்பு உதாரணத்தில், மனசு மகிழ்ச்சியாக இருந்தால், சிரிப்பு வரும். இதில் நிகழ்வு மகிழ்ச்சியாக இருத்தல், அதன் பலன் சிரிப்பு வருவது. இங்கே சித்தாந்தமும் அறிவியலும் கை கோர்த்துக் கொண்டு “பலனாகிய சிரிப்பை உண்டாக்கு, மகிழ்ச்சி தானாக வரும்” என்கிறது. சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு, செயற்கையாக சிரிப்பை வரவழைப்பதைவிட, சிரிப்புத்துணுக்குகள் படித்து, ஹாஸ்ய நாடகங்கள் பார்த்து இயற்கையான சிரிப்பில் மகிழலாமே.
வங்கத்தமிழன்

Thursday, August 05, 2004

ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
திருக்குறள்

“பாஷா, பாஷாடா, நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி”. இந்த வசனம் தெரியாத தமிழனே இருக்க முடியாது. இதை மேலோட்டமாகக் கேட்டிருக்கிறோமே தவிர, அதன் உள்ளிருக்கும் கருத்து என்ன என்று புரிந்து கொண்டவர்கள் சிலரே. நான் ரஜினி ரசிகன், திரைப்படத்திற்கு விமரிசனம் எழுதுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.

அதாவது, வள்ளுவர் சொன்னது, ஒருவன் சொல்லும் ஒரு சொல்லை ஆராய்ந்து, அதைவிட நல்ல சக்திவாய்ந்த சொல் வேறொன்றுமில்லை என்று அறிந்த பிறகு தான் ஒரு சொல்லைச் சொல்ல வேண்டும் என்கிறார். அதைத்தான் இப்போது, “நாம சொல்றத தான் செய்யறோம், செய்யறத தான் சொல்றோம்” என்றும், “நாம யோசிக்காம பேச மாட்டோம், பேசிட்டு யோசிக்க மாட்டோம்” என்றும் சூப்பர் ஸ்டார் சொல்றாருங்க.

வங்கத்தமிழன்

Wednesday, August 04, 2004

தன்னெஞ்சே தன்னைச் சுடும்

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
திருக்குறள்

தான் சொல்வது பொய்தான் என்று அறிந்தும் ஒருவன் பொய் சொல்லும் காலத்தில், அந்தப் பொய்யை அவன் சொல்லியபின், அவன் நெஞ்சம் அவனை, “பொய் சொன்னாயே, பொய் சொன்னாயே” என்று வாட்டி வதைக்கும்.

ஒரு பெண்ணின் தந்தை, அவளுக்கு மணமுடிக்க எண்ணி மணமகன் தேடப் போக, பிள்ளை வீட்டார், அவரிடம் 20 பவுன் பொன் நகை கொடுத்தால் கல்யாணம் பற்றி பேசலாமென்று கூற, “சரி” என்று தலையாட்டி விட்டு வந்துவிட்டார். இரண்டு பவுனுக்கே வழியில்லாத போது எங்கிருந்து 20 பவுன்? அவர் குறுக்கு வழியில் எண்ணத் தொடங்கி, நல்ல கவரிங் நகையாக வாங்கி, அதைப் பொன் நகை என்று காட்டி கல்யாணமும் முடிந்தபின், அவர் மனம் தினமும் “குட்டு வெளிப்பட்டுவிட்டால் என்ன செய்வது” என்ற பயத்திலேயே பதைபதைத்தது.

ஏன் சார், அவர் மனசாட்சிக்கு எதிராக ஒரு செயலைச் செய்துவிட்டு, அது பொய்யென்று தெரிந்தும் மறைத்ததால் தானே இந்த நிலை? கூனி குருகி நிற்க வேண்டிய கட்டாயம்? இக்காலத்தில் அத்தகைய நிபந்தனைகள் இல்லாது, பெண்ணை ஒரு வியாபாரப் பொருளாகப் பார்க்காது, அவளை ஒரு மனிதப் பிறப்பாக மதித்து, சம அந்தஸ்து கொடுத்து வாழ்க்கை நடத்த, எவ்வளவோ நல்ல இளைஞர்கள் இருக்க, அத்தகைய பொய் எல்லாம் சொல்லாமல், நிபந்தனைகளுக்கு படியாது ராஜா போன்ற ஒரு நல்ல மணமகனாகத் தேடி திருமணம் செய்விக்கலாமே.

வங்கத்தமிழன்

Tuesday, August 03, 2004

மழித்தலும் நீட்டலும்

மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம்
பழித்த தொழித்து விடின்
திருக்குறள்

மொட்டையடித்துக் கொள்வதோ, ஜடாமுடி வளர்த்துக் கொள்வதோ ஒருவன் இந்த உலகம் பழிக்கும் விஷயங்களை விட்டுவிட்டால் தேவையில்லை.

உலகம் பழிப்பது, சூது/வாது, வஞ்சனை, பொறாமை, அடுத்தவன் குடி கெடுக்கும் மனப்பாங்கு போன்றவை. துறவறம் என்பதை பலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர், இல்லையேல் இத்தனைப் போலி சாமியார்கள் எப்படி? “கிக்கு வருதா? கிக்கு வருதா? பிரேமானந்தா” என்ற பாட்டு தான் எப்படி? அன்பே உருவானவர்கள், எல்லோர் மீதும் சமமான அன்பு கொண்டவர்கள், தனக்கென ஒன்றும் வைத்துக் கொள்ளாது, எல்லாவற்றையும் பொதுவென வைப்பவர்கள், தானறிந்த நல்ல விஷயங்கள் எல்லோரும் அறிந்து அதன்மூலம் நன்மையடைய வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவர்கள்தாம், உண்மையில் உலகம் பழித்தது ஒழித்தவர்கள். இவர்கள், தன்னைத்தானே துறவி என்று சொல்லிக் கொண்டு திரிய மாட்டார்கள். இவர்களுக்கு மேற்குறிப்பிட்ட மழித்தல், நீட்டல் போன்ற அடையாளங்கள் தேவையில்லை.

வங்கத்தமிழன்

Thursday, July 29, 2004

ஈகை

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
திருக்குறள்

கொடை என்பது இல்லாத ஒருவர்க்கு, தன்னிடமுள்ள ஒன்றை மனமுவந்து கொடுப்பது. ஆனால் ஒருவனிடம் இருக்கிறது என்று தெரிந்தும் அவனுக்கு ஒன்று கொடுத்தால் அது ஏதோ பிரதிபலனை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவதற்கு ஈடாகும்.

பொன் பொருள் போன்ற போகப் பொருட்களைவிட மிக அத்தியாவசியம் ஒரு மனிதனுக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் தான். பசியில் வாடுபவனுக்கு ஒரு வாய் சோறு கொடுப்பதைவிட உயர்ந்த செயல் வேறொன்றும் இல்லை. அங்ஙனம் பசி என்று வந்து கேட்கும் இறைவனடியார்க்கு கணவன் அருகில் இல்லாததால் அவனுடன் சேர்ந்து உணவு வழங்கி உபசரிக்க வழியில்லையே என்ன கண்ணகி வருந்தியதாக இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

அப்படி ஒரு தேவையுமில்லாது ஒருவன் கேட்டுப் பொருள் பெறுவது வழிப்பறிக் கொள்ளையைவிட மோசமானது. அப்படி வறிய நிலையில் இல்லாதவனைத் தேடிச் சென்று பொருள் கொடுப்பது கையூட்டுக்கு (லஞ்சத்திற்கு) ஈடானது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

வங்கத்தமிழன்

Wednesday, July 28, 2004

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவந்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்
திருக்குறள்

“உன்னை மகனாக அடைந்ததன் இன்பத்தை நான் இப்போது தான் பெறுகிறேன்”, என்றோ, “உன்னைப் பிள்ளையாகப் பெற்றதற்கு நான் குட்டிச் சுவற்றில் சென்று முட்டிக் கொள்ளலாம்” என்றோ கூற்றுக்கள் தந்தையர்க்கும் அவர் மகவுகளுக்கும் இடையே நடக்கக் கூடியது தான். பெருமை பூரிக்கும் ஒரு தந்தை, தன் மகனைப் போற்றியும், அவன் செயல்களால் அவமானம் அடையும் தந்தை, “ஏன் எனக்கு மகனாகப் பிறந்து இப்படி உயிரை வாங்குகிறாய்” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

சரி, இந்த நிலை சரி தானா? உண்மையிலேயே, மாதா பிதாவின் செயல்களுக்கும் மக்களின் செயல்களுக்கும் தொடர்பில்லையா? ஒரு உதாரணத்திற்குப் பார்ப்போம், தந்தை சிகரெட் பிடிக்கிறார், மகனும் பள்ளிக்கல்வி முடிக்கும் முன்னரே, திருட்டு தம் அடிக்கிறான். விவரமறிந்த தந்தை, “ஏன் சிகரெட் பிடிக்கிறாய்” என்று கேட்க முடியுமா? சரி நான் தான் கெட்டுப் போய்விட்டேன், நீயாவது ஒழுங்காக இருக்கக் கூடாதா? என்ற கேள்விக்கெல்லாம் மதிப்பிருக்காது. உலகில் பல மகான்கள் இருந்தனர், “புத்தர், ஏசு, மகாத்மா” போன்று. அவர்கள் சொன்னதைச் செய்தனர், அதனால் தான் மதிப்பு, இல்லையேல் துரும்பைவிட துச்சமாகத் தானே மதிக்கப் பட்டிருப்பர்.

வள்ளுவர் சொன்ன நிலை, ஒரு “அசாதாரண”, “தலை சிறந்த”, “உன்னத” நிலையை எட்டிய மகன், தன் தந்தைக்கு அத்தகைய பெயரைப் பெற்றுத் தருவான். எல்லா மகன்களும், “உன்னால் முடியும் தம்பியில்” வரும் கமலஹாசன் கதாபாத்திரம் போல தந்தைக்கு பெயர் சேர்க்க வேண்டுமாம், ஆனால் இந்த தந்தைகள் மட்டும் திருந்தவே மாட்டார்களாம். என்னங்க கதை (நான் எல்லா தந்தையர்களையும் சொல்லவில்லை, ஒரு சில பொறுப்பில்லாதவர்களை மட்டும் தான்). பாட்டு “எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று தானேங்க சொல்லுது, “தந்தை வளர்ப்பினிலே”னு சொல்லலியே, என்று பொறுப்பற்றுத் திரிந்துவிட்டு, மகன் மட்டும் உதவி செய்யணும். அத்தகைய உதாரணக் குழந்தையைப் பெற இமய மலைக்குப் போய் தவம் (நோன்பு) செய்யச் சொல்லவில்லை வள்ளுவர், உன் வாழ்க்கையையே ஒரு நோன்பாக, யாகமாக வாழ்ந்தால், உன் பிள்ளைகளைப் பார்த்து, நிச்சயம் இந்த சமுதாயம் “இவன் தந்தை என்னோற்றான் கொல்” என்று சொல்லும்.

வங்கத்தமிழன்

Tuesday, July 27, 2004

“நாவடக்கம்”

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
திருக்குறள்

அடக்கம் என்ற தன்மை ஒருவனை தேவனுக்கு ஈடாக உயர்த்தும் என்பது திருவள்ளுவர் சொல்லிய வாக்கு. அந்த வகையில் அடக்கமுடையவனுக்கு எல்லாவிதத்திலும் சிறப்பு என்று நாம் அறிகிறோம். ஒருவன் தன் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும் (இந்த இடத்தில் வயிற்றுக்கு ஈயப்படும் பொருளைக் கொண்டு வள்ளுவர் சொல்லவில்லை). நாவடக்கம் என்றால், எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்று பகுத்தறியும் தன்மை. ஒருவனுக்கு மிகவும் அவசியம் “நாவடக்கம்” அல்லது “சொல்வன்மை”. எதை எங்கே பேசுவது என்று தெரியாது பேசிவிட்டு, பிறகு ஐயோ பேசினோமே என்று வருத்தப் படுவதில் என்ன பலன்?

ஆகையால் ஒரு மனிதன், (இக்கால அரசியல்வாதி போலில்லாமல்) நாவடக்கம் கொண்டவனாக இருந்தால் அவன் பெருமையடைவான், மாறாக வாயில் வந்தபடிப் பேசிவிட்டால், மற்றவரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அசிங்கப்பட்டுப் போவான்

வங்கத்தமிழன்

Monday, July 26, 2004

பெண்மணி அவள் கண்மணி

ஆணை சிவ வடிவமாயும், பெண்ணை சக்தி வடிவமாகவும், சக்தியில்லையேல் சிவமில்லை என்றும் வைத்து, பெண்ணை பெருமைபடுத்தியுள்ளது தமிழ் பண்பாடு. அத்தகைய பெண் சக்தியே இப்போது சக்தியற்று இருக்கிறது தமிழ்நாட்டில். “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே, சேலை உடுத்த தயங்குறியே” என்று பாட்டு கூட வந்துவிட்டதல்லவா? ஒரு ஆணைவிட சக்தி அதிகம் படைத்தவள் பெண். “கண்ணின் கடை பார்வை காதலியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்ற பாடல் வரி கூறுவது என்ன. ஒரு ஆணுக்கு கண்ணின் கடைபார்வையால் அத்தகைய மாபெரும் சக்தியை தரவல்ல பெண்ணிடம் எவ்வளவு சக்தி நிறைந்துள்ளது? ஆனால், இந்த பெண் சக்தி ஏனப்பா தவறான வழியில் தடம் மாறிச் செல்கிறது? திரையிலும், தொலைக்காட்சியிலும், எதற்கெடுத்தாலும், எதைப் பார்த்தாலும், குறை ஆடை பெண்கள் இல்லாத நிலையே பார்க்க முடியவில்லை.

மகாத்மா காந்தி அரையாடை உடுத்தி உலகப்புகழ் அடைந்தார் என்பதால், இக்கால பெண்கள் திரையில் குறையாடை பதுமைகளாக காட்சியளிக்கிறார்களோ? இதற்கு சப்பைக்கட்டு வேறு, “என்னங்க செய்ய, அப்படி ஆடை குறைக்க மறுத்தால் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வது” என்று. காட்சிப் பொருளாக இல்லாமல், விளம்பரப் பொருளாக இல்லாமல், மேம்பட்டு உலக அரங்கில் முன்னேறி, தங்களுடன் இருக்கும் ஆண்களுக்கு சாதிக்க சக்தியைத் தந்து உலக மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைக்க வல்ல பெண்ணினமே, “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்ற பாட்டுக்கு அரசனின் சொற்படி, நீயும் எழுந்து, ஆண்களாகிய எங்களுக்கும் சக்தியைத் தந்து முன்னேற்ற வா.

வங்கத்தமிழன்

Saturday, July 24, 2004

அன்பு

 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
திருக்குறள்

நல்லறனும், தூய அன்பும் ஒரு இல்லத்தில் இருக்குமாயின், அந்த குடும்பத்தில் நற்பண்பும், வாழ்க்கையின் பயனும் கிடைக்கப் பெறும். இப்போது, இத்தகைய அன்பு, நல்லறனும், நற்பண்புகளும் பல இல்லங்களில் காணப்படாததால் தான் விவாக ரத்து போன்ற பிரச்சனைகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

கணவனுக்கு தகுந்தாற் போல் மனைவி படிந்து போக வேண்டும் என்று கணவன் நினைப்பதும், ஆண் ஆதிக்கம் அதிகமாகிறது, ஆகையால் படிந்து போகக் கூடாது என்று மனைவி நினைப்பதும் தான் பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் வர காரணம். இவ்வாறு இல்லாது, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு, இருவரும் சமம் என்ற எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்நோக்கினால், “நல்லதொரு குடும்பம், பல்கலை கழகம்” என்ற கூற்றுக்கு ஏற்ப பயனுள்ளதாக அமையும்.

வங்கத்தமிழன்

Friday, July 23, 2004

செயற்கரிய

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
திருக்குறள்

சொன்ன நல்ல விஷயத்தினை நல்லவிதமான பொருள் கொள்ளாமல் நாட்டுல போலி சாமியார்கள் நிறைய ஆயிட்டாங்கப்பா. “டேய், அந்த சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவருடா, கண்ணால உத்துப் பார்த்தார்னா ஹோம குண்டத்தில நெருப்பு தானா பத்திக்குது” என்றும், “மந்திரத்துல மாங்கா வர வைக்கிறாரு அந்த மகான்” என்றும் மாங்காய் மகான்களை தினந்தோறும் நாம உருவாக்கிட்டு வரோம்.

இது போன்ற மகான்கள் செய்வதெல்லாம் செயற்கரிய செயலில்லைங்க, இவர்கள் தந்திரமா நம்ம ஏமாத்திக்கிட்டிருக்காங்க. செயற்கரிய என்றால் என்னங்க? அறிவுக் கூர்மையாலும், தொடர்ந்த முயற்சியாலும், ஆராய்ந்து கொள்ளும் திறன் மற்றும் இரக்கத் தன்மை போன்றவற்றாலும் தான் பெரியோர் உருவாகின்றனர். இத்தகைய பெரியோர், அடைய முடியாத உயரங்களைச் சுலபமாக தானும் அடைந்து தன்னுடன் உள்ளவர்களையும் வழி நடத்திச் செல்வர். இப்படிப்பட்ட தன்மைகளில்லாதவர்கள் சிறியர்கள். அவர்களால் வாழ்க்கையில் தானும் முன்னேற முடியாது, மற்றவர்க்கும் முட்டுக் கட்டையாக இருப்பர்.

அன்புடன்,
வங்கத்தமிழன்

Monday, July 19, 2004

அஞ்சாமை

 
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
திருக்குறள்

அஞ்சாத தன்மை, கொடைத்தன்மை (இரக்க சிந்தனை), சிறந்த அறிவு மற்றும் அயரா முயற்சி ஆகிய பண்புகள் அரசர்க்குத் தேவை.

அரசன் என்பவன் நாட்டை ஆள்பவனாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறு அலுவலகத்தில் நான்கு நபர்களை வைத்து வேலை வாங்குபவனும், ஒரு குழுவிற்கு தலைமை தாங்குபவனும், சமூக சேவை செய்பவனும் (யாராக இருப்பினும்) அவன் தன் நிலையில் ஒரு பொறுப்பை சுமந்து அதை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் அரசனுக்கு (தலைவன் என்று பொருள் கொள்க) ஈடானவன்.

அத்தகைய தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவன் கொள்ள வெண்டிய பண்புகள் தாம் மேற்காணும் பண்புகள். எடுத்த காரியத்தில் பின் வாங்காத உறுதி, தன்னுடன் இருப்பவர் நலம் பேணும் இரக்க சிந்தனை, திட்டப்படி எடுத்த செயலை செவ்வனே செய்யும் அறிவாற்றல், மற்றும் மேன்மேலும் முன்னேற அயரா முயற்சி, இவை நான்கும் கொண்ட ஒருவன் ஒரு சிறந்த தலைவனாக எப்போதும் திகழலாம். அலுவலகங்களில் பெரும்பாலும் கிடைக்கப் பெறும் மேலதிகாரிகள் தனக்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு கம்சனாகவும், பகாசுரனாகவும், நரகாசுரனாகவும் தெறிவதற்கு முக்கிய காரணமே, அந்த தலைமை பொறுப்பில் உள்ள நபர் மேற்காணும் பண்புகளில் ஏதாவது ஒன்றையோ, அல்லது நான்கையுமேயோ பெறாத நிலையால் தான்.

அன்புடன்,
வங்கத்தமிழன்

Saturday, July 17, 2004

வாய்மை

 வாய்மையெனப் படுவது யாதெனில் - யாதொன்றும்
தீமையிலாத சொலல்.
திருவள்ளுவர்

பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து விட்டு, இது என்ன பொய் சொல்லலாம் என்கிறாரே வள்ளுவர் என்று நினைக்கிறீரா? அவர் என்ன சொல்கிறார், தீமை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் உண்மை போன்றது. படுக்கையில் கிடக்கும் ஒரு மனிதனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் போது, கடவுளை நம்புங்கள் என்று மருத்துவர் சொன்ன பிறகு அந்த மனிதனிடம் "ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை, நீ விரைவில் குணமடைவாய், டாக்டரே சொல்கிறார்" என்று சொல்வதில்லையா? அது பொய் தான் என்றாலும், இருக்கும் வரை அந்த மனிதன் நிம்மதியாக இருந்து செல்லட்டுமே என்று தானே அத்தகைய பொய் சொல்கிறோம். வள்ளுவர் அதைத் தான் வாய்மைக்கு ஈடானது என்கிறார். மாறாக, மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார், ஏசு நாதர், நபிகள் நாயகம் எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள் ஆகையால் நான் உண்மை தான் பேசுவேன் என்று அந்த நோயாளியிடம், "ஐயா, டாக்டர் சொல்லிவிட்டார், நீ சீக்கிரம் போய்டுவேன்னு, மூட்டைய கட்டு என்றால் என்னவாகும்.

ஜெயகாந்த் இராமமூர்த்தி.

Friday, July 16, 2004

கருத்துப் பரிமாற்றத்தின் முக்கியத்துவம்

 
கருத்துப் பரிமாற்றத்தின் முக்கியத்துவம்
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றதற்கு ஏற்ப, ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தெறிந்தவைகளை மற்றவரோடு பகிர்ந்து கொண்டால் அனைவர்க்கும் நன்மை. நாம் தனி மனிதர்கள் இல்லை, ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம், ஆதலால் நம் வெற்றியின் ரகசியத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் சமுதாயம் மேம்படும். சமுதாயம் மேம்படும் போது தனி நபர் நிலையும் மேம்படும், ஆனால் “சமுதாயம் மேம்பட்டால் என் நிலை தாழ்ந்துவிடும்” என்று எண்ணும் ஒரு மனிதன், தன் கருத்துக்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள மறுக்கிறான், அதனால் தன் நிலையையும் மேம்படுத்திக் கொள்ளாமல், சமுதாய மேம்பாட்டிற்கும் உதவாமல், ஒன்றுக்கும் உதவாத நிலையை அடைகிறான்.

இப்படி எடுத்துக் கொள்வோம். உங்களிடம் இரண்டு ரூபாய் இருக்கிறது, என்னிடம் இரண்டு ரூபாய் இருக்கிறது. உங்களிடம் வேண்டி அந்த இரண்டு ரூபாயை நான் பெற்றுக் கொள்கிறேன், இப்போது என்னிடம் நான்கு ரூபாய் உளது ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை. சரி ரூபாய்க்கு பதிலாக நம் இருவரிடமும் தலா இரண்டு நல்ல கருத்துக்கள் உள்ளன. இருவரும் அமர்ந்து கருத்துகளை பரிமாறிக் கொண்டபின் பாருங்கள், இருவரிடமும் தலா நான்கு கருத்துக்கள் அல்லவா இருக்கிறது? அப்படி இருக்க ஏன் கருத்துகளை பரிமாறிக் கொள்ள ஏன் தயங்குகிறான் மனிதன்?

அன்புடன்,

வங்கத்தமிழன்,
(ஜெயகாந்த் ராமமூர்த்தி)

Thursday, July 15, 2004

எது நட்பு?

“நகுதற் பொருட்டன்று நட்டல் - மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு”
திருவள்ளுவர்.

ஃபிகர பாருடா மாமு சும்மா டக்கராகுது, நண்பா ஒண்ணா ஒக்காந்து போற வர ஃபிகர வெட்டலனா இன்னா மச்சி ஃபிரண்ட்சிப், என்று சென்னை தெருக்களில் (பெரும்பாலும் கல்லூரி அருகாமையில்) பிகில் (whistle) விடும் பெருந்தகைகளை நாம் நிறைய பார்த்திருப்போம். இதில் வாயில் மிக style ஆக சிகரெட் வேறு. இவற்றைப் பார்க்கும் போது வள்ளுவர் நட்பைப் பற்றிச் சொன்னது நம் நினைவிற்கு வரும்.

எதுங்க நட்பு? சும்மா கெட்ட வழிகளில் சென்று கும்மாளம் போடுவதா நட்பு? ஒருவன் தவறு நிறைய செய்யும் பொழுது, அவனை இடித்து திருத்தி நல்வழிப் படுத்துவது தான் நட்பு என்றார் வள்ளுவர்.

அன்புடன்,
வங்கத்தமிழன்
(ஜெயகாந்த் இராமமூர்த்தி)

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை தேதி: 15 ஜூலை 2004

இன்றைய சிந்தனை

“இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு”
திருக்குறள்

ஒரு காதலி காதலனுடன் சேர்ந்திருப்பது பற்றி கூறுவதாக அமைந்த பாடல் இது என்றாலும், இதில் சொல்லப்பட்ட கருத்து மனிதனின் துயரங்களுக்கு எது காரணம் என்பதை விளக்குவதாக உள்ளது என்பதால் இந்த குறளை எடுத்துக் கொள்வோம்.

“அவருடன் காதல் கொள்ளத் தொடங்கிய காலத்தில், அவரைக் கண்டாலே மனம் மகிழ்ச்சியால் குதூகலிக்கும், ஆனால் இப்போதோ அவரை ஆறத்தழுவிக் கொள்ளும் போதும், அவரை எப்போதாவது பிரிய நேரிடுமே என்ற அச்சத்தால் மனம் கலங்குகிறது” என்று தலைவி தலைவன் மீது கொண்ட காதல் பற்றிச் சொல்வதாக அமைந்தது.

ஒரு சராசரி மனிதனை இந்த தலைவியின் நிலையில் வைத்து பார்ப்போம். அவனிடம் இன்று கையில் என்ன இருக்கிறதோ அதை கண்டு மகிழ்ச்சி அடைய மறுக்கிறான். இன்னது நடந்துவிடுமோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்டிவிடுகிறான். இன்று என் கையில் இரண்டு ரூபாய் இருக்கிறது, ஆனால் நானோ அந்த இரண்டு ரூபாயை எப்படி சரியாக பயன்படுத்தி மகிழ்ச்சியடைவது என்று பாராமல், என்னிடம் பத்து ரூபாய் இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணுகிறேன். அந்த பத்து ரூபாய் கையில் வந்தால் தவிர மகிழ்ச்சியடைய மறுக்கிறேன். நாளை ஒரு வேளை பத்து ரூபாய் கிடைத்து விட்டால் மகிழ்ச்சி வருமா? அப்போது மனம் நூறு ரூபாயை நாடும். (ஆக இதற்கு முடிவே இல்லை). எப்போது மனிதன் நிகழ்காலத்தில் இருப்பதால் மகிழ்ச்சியடைந்து வாழக் கற்றுக் கொள்கிறானோ, அப்போது தான் அவனுக்கு வாழ்க்கை இனிக்கும் என்ற கருத்தை இந்த “பிரிவு ஆற்றாமை” திருக்குறளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வழியுண்டல்லவா?

அன்புடன்,

வங்கத்தமிழன்
(ஜெயகாந்த் ராமமூர்த்தி)

Wednesday, July 14, 2004

கற்பு என்ற நிலை

21 ஜூன் 2004 உலகத்தமிழர் மடல் குழுவிற்கு அனுப்பப்பட்ட அஞ்சல்

கற்பு என்ற நிலை

கற்பு என்ற நிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்றார் பாரதி. மனத்துக்கண் மாசிலாத நிலை தான் கற்பு என வரையறுக்கப் பட்டுள்ளது. வள்ளுவர், "கற்றதனாலாய பயனென்கொல் வாலரிவன், நற்றாள் தொழாஅரெனின்" என்று பாடினார்.

கடவுளை வணங்குவதால் மனம் தூய்மையடைகிறது, தூய மனம் மற்றவருக்கு நல்லதையே செய்ய முற்படும். கல்வி கற்பதன் முக்கியத்துவமே மற்றவர்க்கு நல்லன செய்வது தான். ஆகையால் இறைவனை வணங்காதவன், கல்வி கற்றும் பயனில்லை என்கிறார் வள்ளுவர்.

தூய மனமே கற்பு என்ற விளக்கத்தைக் கொண்டால், அந்த நிலையை பெண்களுக்கு மட்டும் (அதுவும் உடல் சம்பந்தப் படுத்தி) வைப்பது எவ்வளவு அறிவீனம்.

வங்கத்தமிழன்
ஜெயகாந்த் இராமமூர்த்தி.

புன்கணீர் பூசல் தரும்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள்
ஆர்வலர்புன் கணீர்பூசல் தரும்
வள்ளுவர்

அன்பு மேலிடும் போது அதை அடைத்து தாளிட்டு வைக்க இயலாது. என்ன தான் அடைத்து வைத்தாலும் அது எப்படியாவது சிறு கண்ணீர் துளிகளாகவாவது வெளியே வந்தே தீரும்.